Thursday 6 February 2014

அருளின் அற்புதங்கள் - எழுதியவர்- நாகசுந்தரம்

அருளின் அற்புதங்கள்
எழுதியவர்-
வேதாந்தகவியோகி  நாகசுந்தரம்
               
                உலகில் ஸாதகர்களுக்கு ஸ்ரீகுருவின் அருள் நிச்சயம் வேண்டும் என்பது சாஸ்த்ரங்களின் முடிந்த முடிவு.  மந்த்ரத்திலும் உபாஸனையிலும் ஸித்தி ஏற்பட வேண்டுமானால் அதற்கு ஸ்ரீகுருவின் அருள் மிகவும் தேவை.  ஸ்ரீகுருவின் அருளால் தன் குருநாதராலேயே அருள்சக்தி என்று அழைக்கப்பட்ட எனது தகப்பனாரும் நமது குருநாதருமான பூஜ்யஸ்ரீஅருட்சக்தி நாகராஜன் அவர்கள் வாழ்க்கையில் பல பல ஆச்சர்யகரமான, அற்புதமான நிகழ்ச்சிகள் நடந்தன. நடந்தும் வருகின்றன. அவற்றில் சில எனக்கு நேரில் தெரிந்தவை. சில அம்மா சொன்னவை. சில நண்பர்கள், உறவினர்கள் மூலம் கேள்விப்பட்டது, அதனைத்தான் இதில் காணப்போகிறோம். மற்றும் நமது பரமகுருநாதர் அருள் அற்புதங்களும் இன்னும் சில மஹான்கள், ஸன்யாஸிகள் ஆகியவர்களின் அற்புத ங்களும் கூட இதில் பதிவு செய்துள்ளேன். பொருந்தினால் நான் தன்யனாவேன்.

                எனது தகப்பனார் சிறு வயது முதலே ஸித்தர்கள், மஹான்கள் இவர்களிடம் ஈடுபாடு உடையவர். எங்களின் கிராமமான நாகரசன் பேட்டையில் ஒரு ஸித்த புருஷர் - மஹான் ஸ்ரீகாரைஸித்தர் - என்பவர் வசித்து வந்தார்.  அவர் மஹா ஸித்திகள் கைவரப் பெற்றவர். அவரிடம் எனது தகப்பனார் நெருங்கி பழகி வந்தார். அதுபற்றியுள்ள பல நிகழ்ச்சிகளை பிறகு விவரிக்கிறேன். அந்த கிராமத்தில்தான் எனது தகப்பனார் தன் குருநாதரான குஹானந்தமண்டலி பூஜ்யஸ்ரீஅனந்தாநந்தநாதர் அவர்களை ஸந்திக்க நேர்ந்தது. அதன்பின்தான் இவர் ஸந்யாஸ வாழ்க்கையில் ஈடுபாட்டுடன் இருந்துவந்தவர் தன் குருநாதர் சொல்படி திருமண வாழ்க்கையில் ஈடுபட்டார். அவரது ஒரு சொல்லே- ஞான ஈடுபாட்டுடன் இருந்த தன்னை பூரணஞானவானாக, வாழையடி வாழையாக வந்து கொண்டிருக்கும் ஸ்ரீவித்யாஉபாஸனா மார்க்கத்தின் ஒரு சிறிய வாழைக்கன்றாக ஆக்கியது என்றால் மிகையில்லை என்று அடிக்கடி கூறக்கேட்டிருக்கிறேன். அதுமுதல் எனது தகப்பனார் தனது இல்வாழ்க்கையை எவ்வாறு நடத்தி வந்தார், வருகிறார் என்பதை இந்த இடத்தில் சற்று ஆதார பூர்வமாக விவரிக்க வேண்டியுள்ளது.

                ச்ருங்ககிரியில் பீடாதிபத்யம் நடத்திவந்தவரும், பலவேதாந்த க்ரந்தங்களை இயற்றியவருமான பூஜ்யஸ்ரீவித்யாரண்யஸ்வாமிகள் செய்ததான ஒரு க்ரந்தமுண்டு. அதனை பஞ்சதசீ என்ற பெயரில்  பெரியோர்கள் அறிவார்கள். அதிலே த்யானதீபம் என்ற அத்யாயத்தில் அவர் கூற்றாக சில ஸ்லோகங்களை இதில் பார்க்கப் போகிறோம்.
ஸதா காலமும் த்யானபரமாக, ஞானபரமாக ஒருவர் வாழ்கிறார் என்றால் அவரது உலக தொடர்பைப்பற்றி இங்கு ஸ்வாமிகள் விளக்குகிறார்.
புஞ்ஜானோ அபி நிஜாரப்தம் ஆஸ்தாதி சயதோ  அனிசம் !
த்யாதும் சக்தோ ந ஸந்தேஹோ விஷயவ்யஸனி யதா !!

                இதற்கு பொருள்- ஒரு ஞானி என்பவன்- தன்னுடைய ப்ராரப்தகர்மாவை அனுபவித்துக் கொண்டிருந்தபோதிலும், தனது உபாஸனை பிடிமானத்தின் பலத்தினால் எப்போதும் த்யானம் செய்து கொண்டிருக்க அவனால் முடியும். விஷய சுகங்களில் ஆஸக்தி யுள்ளவன் எப்படியிருப்பானோ அப்படியிருப்பான். இதில் கொஞ்சங்கூட ஸந்தேஹமில்லை. அதாவது விஷய சுகங்களில் ஈடுபட்டவர்கள் உண்பது, உறங்குவது, வேலை செய்வது முதலியற்றை எப்படி அனிச்சை செயலாக செய்கிறார்களோ அவ்விதமே ஆன்ம சுகத்தில் ஈடுபட்டவர்களுக்கு உலக விவகாரங்களும் அனிச்சை செயலாக இருப்ப தனால் அவர்களுக்கு அவ்விவகாரங்களினால் ஏற்படும் வினைத்தொடர்புகள் கிடையாது. அதனால் அவர்கள் ப்ரவ்ருத்தியில் ஈடுபடுவதனால் கெடுதல் ஒன்றும் ஏற்படாது.
ஏவம் த்யானைக நிஷ்டோ அபி லேசாது லௌகிகம் ஆசரேத் !
தத்வவித்தத்வவிரோதித்வாத் லௌகிகம் ஸம்யகாசரேத் !!

                இதற்கு பொருள்- த்யானத்திலே நிலைத்திருப்பவனும் உலகாயதமான கார்யத்தை ஸ்வல்பமாகவே செய்வான். தத்வமறிந்தவனோ - தத்வஞானத்திற்கு உலக கார்யம் - விரோதமில்லாததினால் உலககார்யத்தை நன்றாகவே செய்வான்.

                இவ்வாறெல்லாம் சாஸ்த்ர வாக்கியங்கள் இருப்பதால்தான் ஸ்ரீபரமகுருநாதர் இவரை இல்லறத்தில் ஈடுபடவைத்தது பொருத்தமாக உள்ளது என்பதை ஸ்ரீகுருஜியின் நடவடிக்கைளைக் கொண்டு நாம் அறிந்து கொள்கிறோம். அதனால் அவர்கள் வாழ்க்கை அற்புதங்கள் நிறைந்ததாக ஆனது. அதனைத்தான் இங்கு வரிசையாக விவரித்துள்ளேன். நிகழ்ச்சிகள் அத்தனையும் உண்மை. ஆனால் சில இடங்களில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் மட்டும் குறிப்பிடவில்லை.

                1. ஒரு நாள் கிராமத்தில் வாசலில் உட்கார்ந்து கிராம அதிகாரியின் வேலைகளில் இருந்தார் அப்பா. அப்போது ஒரு குடுகுடுப்பைகாரன் அங்கு வந்தான். எங்கள் வீட்டருகில் வந்தவன் திடீரென்று கத்திப்பேச ஆரம்பித்தான். எனக்கு நீங்கள் நிறைய ஆடை அணிகலன்கள் கொடுத்தால்தான் இவ்விடம் விட்டு நகருவேன் என்று ஆவேசத்துடன் பேசினான். பொறுமையாய் இருந்த அப்பாவை வேண்டுமென்றே வம்புக்கிழுத்தான்.  என்னிடம் என்ன உள்ளது தெரியுமா ?  இதோ பாருங்கள் என்று கூறி தன் பையில் இருந்து ஒரு கை எலும்புக்கூட்டை எடுத்துகாட்டி மிரட்டினான். அதற்கு அப்பாவும் அவனைப்பார்த்து அதை விட என்னிடம் அதிகமான சக்தி வாய்ந்த பொருள் உள்ளது.  நீ ஜடமான பொருளை கொண்டு மிரட்டுகிறாய். ஆனால் என்னிடம் உள்ள வஸ்த்துவோ சைதன்யமான வடிவம். அது உன்னை ஓடஓட விரட்டும்- என்று கூறவும், அதை என்னிடம் காட்டுங்கள் என்று அவன் கூறினான்.  அதற்கு அப்பா அதை உன்னால் பார்க்க முடியாது அஹங்காரம் உள்ள வர்களுக்கு அது தெரியாது. இப்போது பார்! -என்று கூறவும் அவன் பின்பு பயத்துடன் இவரது வீர முழக்கத்தால் சத்தமின்றி சென்று விட்டான். இந்நிகழ்;ச்சியானது ஒரு உபாஸகன் எவ்விதம் வீரத்துடன் தனது உபாஸக தெய்வத்தை திடமாக நம்பவேண்டும் என்று எடுத்துக்காட்டாக அமைந்ததுள்ளது.

              

அற்புதங்கள் தொடரும் .......


No comments:

Post a Comment